கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2021-04-07 11:19 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுஇடங்களில் முக கவசம் அணிவது தனிநபர் இடைவெளியை கட்டாயம் பின்பற்றுவது என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் ஏதேனும் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

நாளை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் எனப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது. தேர்தலுக்குப் பிறகு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவுவது வதந்தியே. கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்று சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை மற்றும் அத்தியாவசியமற்றப் பணிகளுக்குத் தடை விதிப்பது போன்றவை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்