ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை
ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அம்மையப்பன் என்பவரது மகன் அண்ணாமலை ஈஸ்வரன் (45). இவர் திமுக 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார்.
கடந்த வருடம் இதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவர் கைது செய்யப்பட்டார். பின் ஜாமினில் வெளிவந்து உள்ளார். அண்ணாமலை ஈஸ்வரன் இன்று சேத்தூர் கரையடி விநாயகர் கோவில் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அண்ணாமலை உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் உடலை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் பழிக்குப்பழியாக நடந்ததா? அல்லது வேறு ஏதும் முன்விரோதம் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.