"எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2021-05-18 10:22 GMT
சென்னை,

இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 

”தமிழ் இலக்கியத்திற்கு செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்கள் ஏட்டு அறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளை தந்தவர். வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

மறைந்த எழுத்தாளர் கி.ரா. அவர்கள் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவைப் போற்றும் வகையிலும் அவரது ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடைய புகைப்படங்கள் , படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும் பொது மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு அரங்கம் நிறுவப்படும். 

கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்