தளர்வில்லா ஊரடங்கு; காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை வாகனங்கள் மூலமாக காய்கறி, பழங்கள் நேரடியாக விற்பனை

தளர்வில்லா ஊரடங்கு இன்று (திங்கட் கிழமை) தொடங்குவதால் பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலமாக காய்கறி, பழங்கள் விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

Update: 2021-05-23 19:14 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவுவதுடன், அதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு
தற்போது, இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், கொரோனா பாதிப்பை குறைக்கும் நடவடிக்கையாக, கடந்த 10-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால், கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் குறையவில்லை.இதனால், தளர்வுகள் நீக்கப்பட்டு, இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காய்கறி கடைகளுக்கும் தடை
முந்தைய ஊரடங்கில் காய்கறி, பழக்கடைகள் முதலில் மதியம் 12 மணி வரை இயங்கின. பின்னர் 15-ந் தேதியில் இருந்து காலை 6 மணி முதல் 10 மணி வரையில் மட்டுமே இவை இயங்க அனுமதிக்கப்பட்டன.ஆனால், இப்போது தளர்வு கள் இல்லாத ஊரடங்கில் காய்கறி, பழக்கடைகளும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், பொது மக்களின் நலனைப்பேணுகிற வகையில் காய்கறி, பழ வகைகளை வீடு தேடிச்சென்று வாகனங்களில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஆய்வு

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 23-ந் தேதியன்று (நேற்று) கொரோனா முழு ஊரடங்கினை தொடர்ந்து பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் மருத்துவர் கே.கோபால், வேளாண்மை, உழவர் நலத்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் க.வீ.முரளிதரன் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மக்கள்தொகை சுமார்7 கோடி ஆகும். காய்கறி மற்றும் பழங்கள் தேவை தினந்தோறும் சுமார் 18 ஆயிரம் மெட்ரிக் டன் என எதிர்பாக்கப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை தினந்தோறும் 1,500 
மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவைப்படும்.

விற்பனைக்கு ஏற்பாடு
சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1,610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 2,770 வாகனங்கள் மூலம் 2,228 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வினியோகம் செய்யப்படும். தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் 
பழங்கள் வினியோகம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளை பொருட்கள் சேமிப்பு
இப்பணிகளை கண்காணித்திட தலைமையகத்தில் தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை விற்பனைத் துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகத் தொடரை மேலும் விரிவுபடுத்திட நின்சாகார்ட், வே கூல், பழமுதிர் நிலையம், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் இணையம், அஹிம்சா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றையும் ஈடுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 194 குளிர்பதன இடங்கள் 18,527 மெட்ரிக் டன் கொள்ளளவில் உள்ளன. அதில் தற்பொழுது சுமார் 3 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே விளை பொருட்கள் சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 15,527 மெட்ரிக் டன் கொள்ளளவை அருகில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்.

மதியம் 12 மணி வரை விற்பனை
உள்ளாட்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் அன்றாட காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவையை பூர்த்தி செய்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் விரிவான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்