இணைய வழி வகுப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும்: மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க உதவி எண் உருவாக்கப்படும்

இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்க குழு அமைக்கப்படும், மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு உதவி எண் (ஹெல்ப் லைன் எண்) உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2021-05-26 21:01 GMT
சென்னை,

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் சென்னையில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் கொடுத்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் இணைய வழியாக கடந்த சுமார் ஓராண்டாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் வரப்பெற்ற சில செய்திகளின் தன்மையை கருத்தில் கொண்டு இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும்பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்வதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குழு அமைக்கப்படும்

சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும் அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்றும் சட்டபூர்வமான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்றும் மற்ற பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு பின்வரும் முடிவுகளையும், உத்தரவுகளையும் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இப்பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இருவரை கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும்; இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக்கல்வித்துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குனர், கணினி குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

உதவி எண் அறிவிப்பு

அக்குழு, மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும் இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு உதவி எண் (ஹெல்ப் லைன் எண்) உருவாக்கவும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத்தடுப்பு காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்