கீழடியில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு

தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கீழடியில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Update: 2021-06-12 05:45 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி ஊராட்சியில், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் சார்பில் இதுவரை 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டு, தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகிய இருவரும் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். தொல்லியல் துறை அமைச்சராக பொறுபேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதன் முறையாக கீழடியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவர்களுடன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர். 

இவர்களது பார்வைக்காக கீழடியல் கண்டெடுக்கப்பட்ட பொருட்களான, நமது முன்னோர்கள் பயன்படுத்திய வழுவழுப்பான கற்கோடாரி, செப்பு பொருட்கள், இரும்பாலான கத்தி, காதணி ஆபரணங்கள், இரும்பாலான ஆணிகள், மண்பாண்ட ஓடு, சூது பவளம், பகடைக் காய்கள், சங்கு வளையங்கள், எடை கற்கள் உள்ளிட்ட 16 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் கீழடி அருங்காட்சியகத்தின் கட்டிட பணிகள் குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். கீழடியில் தோண்டத் தோண்ட நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இது தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டும் வண்ணம் அமைந்துள்ளது. தற்போது அகழாய்வு நடைபெற்று வரும் கீழடி ஒரு நகர நாகரீகமாகவும், கொந்தகை ஒரு இடுகாட்டு மேடாகவும், அகரம் ஒரு விவசாய பகுதியாகவும் இருந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்