சைதாப்பேட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம் காதலனோடு சேர்ந்து, கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி அதிரடி கைது

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலனோடு சேர்ந்து அவரது மனைவியே அவரை தீர்த்துக்கட்டியது அம்பலமானது. இதன் பேரில் கைதுசெய்யப்பட்ட அவரது மனைவி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2021-06-21 22:19 GMT
சென்னை,

சென்னை சைதாப்பேட்டை, ஜெயராமன் தெருவில் வசித்தவர் கோதண்டபாணி (வயது 36). இவர் வீடுகளுக்கு உள்அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பெயர் நிரோஷா (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இனிமையாக வாழ்ந்த இவர்களது வாழ்க்கையில் கள்ளக்காதல் குறுக்கே வந்தது. மணிகண்டன் (30) என்பவருடன், நிரோஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. கோதண்டபாணி முதலில் கோடம்பாக்கத்தில் வசித்தார். அப்போதுதான் மணிகண்டன் குறுக்கே புகுந்தார். டெய்லர் கடை நடத்தி வந்த மணிகண்டன், துணி தைக்க வந்தபோது நிரோஷாவை நேசிக்க தொடங்கினார். கோதண்டபாணி வெளியில் சென்ற நேரத்தில், மணிகண்டன் அவரது வீட்டுக்குள் புகுந்துவிடுவார். நிரோஷாவும் அவரும் உல்லாசத்தில் பறப்பார்கள்.

படுகொலை

இந்த கள்ளகாதல் விவகாரம் கோதண்டபாணிக்கு தெரியவந்ததும், அவர் தனது வசிப்பிடத்தை கோடம்பாக்கத்தில் இருந்து சைதாப்பேட்டைக்கு மாற்றினார். இருப்பிடம் மாறினாலும், நிரோஷா-மணிகண்டன் காதல் மாறவில்லை.

தொடர்ந்து அவர்கள் தனிமையில் சந்தித்து வந்தார்கள். மணிகண்டன் சைதாப்பேட்டை வீட்டுக்கும் வந்து நிரோஷாவிடம் காதல் லீலைகளில் ஈடுபட்டார்.

காதல் தொடர்வதை தெரிந்து கோதண்டபாணி கடும் கோபம் கொண்டார். மனைவியுடன் சண்டை போட்டார். மணிகண்டனையும் கடுமையாக எச்சரித்தார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி இரவு கோதண்டபாணி வீட்டில் தூங்கியபோது அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

நிரோஷா மறுப்பு

கள்ளக்காதலுக்காக கணவனை, தனது காதலன் மணிகண்டனோடு சேர்ந்து தீர்த்துக்கட்டியது நிரோஷாதான் என்று போலீஸ் விசாரணையில் சந்தேகம் கொண்டனர். ஆனால் கணவரை தான் கொலை செய்யவில்லை என்றும், மொட்டை மாடி வழியாக யாரோ வந்து கொலை செய்துவிட்டார்கள் என்றும் நிரோஷா மறுப்பு தெரிவித்தார்.

இருந்தாலும் அவரது காதலன் மணிகண்டனை போலீசார் தேடினார்கள். அவர் கைது செய்யப்பட்டால்தான், உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீசார் நம்பினார்கள். நிரோஷாவை பிடித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.

குட்டு வெளிப்பட்டது

நிரோஷாவின் தந்தை மற்றும் தாயார், 2 குழந்தைகள் கொலை நடந்த வீட்டில்தான் படுத்திருந்தனர். நிரோஷா கோதண்டபாணியோடு பால்கனியில் படுத்திருந்தார். தான் கணவரோடு தூங்கும்போது, அவரை வெட்டிக்கொலை செய்துவிட்டனர் என்றும்,

கொலையாளி யார் என்று தெரியாது என்றும், சத்தம் கேட்டு விழித்து பார்த்தபோதுதான் தனக்கு கணவர் கொலை செய்யப்பட்டது தெரியும் என்றும், நிரோஷா கூறினார். அருகில் படுத்திருந்ததால் ரத்தக்கறை சேலையில் பட்டதையும் அவர் போலீசாரிடம் காட்டினார்.

இருந்தாலும் தனது கணவரை தானும், தனது கள்ளக்காதலனும் சேர்ந்து தீர்த்துகட்டி விட்டோம் என்று நிரோஷா அவரது தந்தையிடம், சம்பவம் நடந்தவுடன் கூறி இருக்கிறார்.

ஆனால் போலீசாரிடம் எதுவும் தெரியாதது போல நாடகம் ஆடினார் நிரோஷா. நிரோஷாவின் தந்தையிடம் தனியாக போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் உண்மையைச் சொல்லிவிட்டார். அதன்பிறகு நிரோஷாவால் உண்மையை மறைக்க முடியவில்லை. கொலையை ஒப்புக்கொண்டுவிட்டார்.

பரபரப்பு வாக்குமூலம்

கணவரை கொலை செய்தது எப்படி? என்று நிரோஷா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-

எனது கணவர் மாதத்தில் 15 நாட்கள் வேலை இல்லாமல் வீட்டில் சும்மா இருப்பார். வேலைக்கு போனால்தான் சம்பளம். அவர் சம்பாத்தியம் குடும்பம் நடத்த போதவில்லை. இதனால் அழகு நிலையம் ஒன்றில் நானும் வேலை பார்த்தேன்.

நான் வேலை பார்த்த அழகு நிலையம் அருகில்தான், மணிகண்டனின் டெய்லர் கடை இருந்தது. அவரிடம் ஜாக்கெட் தைக்க கொடுப்பேன். ஜாக்கெட்டுக்கு அளவு எடுப்பது போல, என்னை தொடக்கூடாத இடங்களில் எல்லாம் தொடுவார். அதில் இருந்து நாங்கள் காதலிக்க தொடங்கினோம். அவருக்கு நல்ல வருமானம் வந்தது. அதை என்னிடம் கொடுப்பார். அவரோடு ரகசியமாக சேர்ந்து வாழ முடிவு செய்து, வாழ்ந்தேன். அவருக்கு திருமணம் ஆகி விட்டதாக வெளியில் பொய் சொன்னார். ஆனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை.

தீர்த்துக்கட்ட முடிவு

காதல் விவகாரம் வெளியில் தெரிந்து எனது கணவர் நெருக்கடி கொடுத்தார். எனவே அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டோம். திட்டப்படி எனது கணவரை பால்கனிக்கு தனியாக அழைத்துச் சென்று படுக்கவைத்தேன்.

நானும் அவரோடு படுத்து கொண்டேன். மணிகண்டன் வந்ததும் செல்போனில் கூப்பிட்டார். உடனே கதவை நான்தான் திறந்து விட்டேன். தூக்கத்திலேயே அவரை தீர்த்துக்கட்டி விட்டோம். மணிகண்டனை தப்பிக்க விட்டு, விட்டு நான் நாடக மாடினேன். ஆனால் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது - ஜெயில்

இதன்பேரில் நிரோஷா கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்