தமிழக கோவில்களில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்

தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-08 22:59 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துகள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு, சிலைகள், நகைகள் மாயமாகி உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் பதிவான சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களும் மாயமாகி உள்ளன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

சிலைகளை மீட்க நடவடிக்கை

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் பதிவான சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் மாயமாகவில்லை. அந்த ஆவணங்கள் விசாரணை அதிகாரி வசம் உள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

விசாரணை தள்ளிவைப்பு

மனுதாரர் வெங்கட்ராமன், ‘ஐகோர்ட்டு நியமித்த சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்ற பின் 7 புகார் மனு அளித்தும் அதன் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை' என்றார்.

இதையடுத்து, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த அனைத்து வழக்குகளையும் குறிப்பிட்ட அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.

இதன்பின்னர், வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்