தூத்துக்குடி அருகே நடுக்கடலில் சிக்கி தவித்த 7 மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடி அருகே படகு இயந்திரம் பழுதடைந்து நடுக்கடலில் சிக்கி தவித்த 7 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.

Update: 2021-07-13 01:59 GMT
கோப்பு படம்


தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே தருவைக்குளம் பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். தூத்துக்குடியில் இருந்து தென் கிழக்கே 55 கடல்மைல் தொலைவில் படகு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளது.

இதனால், அவர்களால் தொடர்ந்து செல்ல முடியாமல் நடுக்கடலில் தவித்தனர். தூத்துக்குடியில் உள்ள மீன்வள துறை அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

இந்திய கடலோர காவல் படையினர், அபிராஜ் என்ற ரோந்து கப்பலில் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்களையும் மீட்டு, அவர்களது படகையும் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.

இதன்பின்னர் படகையும், மீனவர்களையும் மீன்வள துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட 7 மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  அதன்பின் அவர்கள் தங்களுடைய வீட்டுக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்