மாமல்லபுரத்தில் கார் கவிழ்ந்து விபத்து: நடிகை யாஷிகாஆனந்த் படுகாயம்; தோழி பலி

மாமல்லபுரம் அருகே கார் கவிழ்ந்து நடிகை யாஷிகாஆனந்த் படுகாயம் அடைந்தார். அவருடைய தோழி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-26 03:01 GMT
மாமல்லபுரம்,

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகாஆனந்த் (வயது 21). தனியார் டெலிவிஷனில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளிசெட்டி பவனி (28). தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்தவர். அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்த இவர் தோழியை பார்ப்பதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார்.

கார் கவிழ்ந்தது

இந்தநிலையில் நடிகை யாஷிகாஆனந்த், அவரது தோழி வள்ளிசெட்டி பவனி, ஆண் நண்பர்கள் சையத்(31), ஆமீர் (32) ஆகியோர் சென்னையில் இருந்து ஒரு காரில் நேற்று முன்தினம் புதுச்சேரி சென்றனர்.

பின்னர் அங்கிருந்து நள்ளிரவு 12 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பி கொண்டிருந்தனர். காரை நடிகை யாஷிகாஆனந்த் ஓட்டி வந்தார்.

மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நடிகை படுகாயம்

படுகாயம் அடைந்த நடிகை யாஷிகாஆனந்த் உள்ளிட்ட 3 பேரும் அலறி துடித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டனர். பின்னர் சென்னை அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நடிகையை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடன் வந்த 2 ஆண் நண்பர்களும் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில் சென்னையில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான காரின் மேல்பகுதி திறக்கும் வகை மாடலை சேர்ந்தது. காரில் வந்தபோது மேற்பகுதியில் ஏறி நின்றவாறு வள்ளிசெட்டி பவனி நடனம் ஆடி வந்ததாகவும் அப்போது கார் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

3 பிரிவுகளில் வழக்கு

வள்ளிசெட்டி பவனி உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் அதிவேகமாக காரை ஓட்டியது, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி ஓட்டியது என 3 பிரிவுகளில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்