ஓடும் காரில் தீப்பிடித்து வாலிபர் உடல் கருகி சாவு

ஓடும் காரில் தீப்பிடித்து வாலிபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

Update: 2021-08-22 23:10 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பிரிவு சாலை அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்ற கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால் யாரும் அருகில் செல்ல முடியவில்லை.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வரும் வரை காத்திருக்காமல் தனியார் மினி லாரி மூலம் தண்ணீரை வரவழைத்து காரின் மீது பீய்ச்சி அடித்தனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வராமல் அதிக அளவில் எரிந்து கொண்டே இருந்தது.

டிரைவர் சீட்டில் கருகி கிடந்த வாலிபர்

சிறிது நேரத்தில் தீ கார் முழுவதும் பரவி எரிந்ததில் டயர்கள் வெடிக்கத் தொடங்கின. பின்னர், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் காரை திறந்து பார்த்த போது டிரைவர் சீட்டில் வாலிபர் ஒருவர் உடல் கருகி பிணமாக கிடந்தார்.

அந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் திருச்சி தென்னூர் மூலக்கொல்லை பகுதியை சேர்ந்த நாராயணன்(வயது 32) என்பதும், சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. மணப்பாறைக்கு சவாரி வந்து விட்டு நேற்று காலை மீண்டும் திருச்சிக்கு திரும்பிய போது கார் தீப்பற்றி இறந்ததும் தெரிய வந்தது. டிரைவர் சீட் லாக் ஆனதால் வெளியில் வர முடியாமல் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்