விவசாயிகளுக்கான மின் இணைப்பு திட்டம் - முதல் அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைத்து அதற்கான ஆணைகளை வழங்குகிறார்.

Update: 2021-09-22 10:42 GMT
சென்னை,

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், விவசாயிகளுக்கு விரைவில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். இதன்படி, பல்வேறு காலக்கட்டங்களில் விண்ணப்பித்து பலா் காத்திருக்கும் நிலையில், வழங்கப்படவுள்ள ஒரு லட்சம் மின் இணைப்புகளில் எவற்றையெல்லாம் சோ்க்கலாம் என ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அந்த பட்டியல் தயாா் செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. 

4 மாதத்துக்குள் இலக்கு நிா்ணயித்து அதற்கான பணிகளை நிறைவு செய்யவும், வரும் மாா்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் மின் இணைப்புகளை முழுமையாக வழங்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு, தேர்தல் முடிந்த பிறகே, விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.

மேலும் செய்திகள்