மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டும்: சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2021-09-26 17:18 GMT
சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
தமிழகத்தில் 3-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திலும் 738 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டன. பல்வேறு இடங்களில் நடந்த முகாம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்தி சென்றனர்.தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள மொன்னையம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளி, தஞ்சை பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள மாநகராட்சி பள்ளி, அம்மன்பேட்டை அருகே உள்ள மணக்கரம்பை ஊராட்சி கணினி சேவை மையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

5 கோடியை எட்டும்
தமிழகத்தில் 3-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற 2- கட்ட தடுப்பூசி முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 3-வது கட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 4.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 5 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 லட்சம்
தமிழகத்துக்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தர வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அடுத்த வாரமும் 50 லட்சம் தடுப்பூசிகள் வரப்பெற்றால் அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மாபெரும் முகாம் நடத்தப்படும். தமிழகத்தில் இதுவரை 500-க்கும் அதிகமான ஊராட்சிகளில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 21 ஊராட்சிகளில் 100 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த மக்களைத் தேடி மருத்துவ முகாம் மூலம் இதுவரை 11.04 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். நீட் தேர்வில் பங்கேற்ற 1.10 லட்சம் பேருக்கு மன நல மருத்துவர்கள், ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. இதில் 200 பேர் அதிக மன அழுத்தத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்