23 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பிரதமருக்கு ஓ.பி.எஸ். கடிதம்

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 23 பேரை மீட்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு, ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-10-16 11:17 GMT
சென்னை,

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.  அவர்கள் 23 பேரையும் விடுவிக்க கோரி,
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கடந்த 11-10-2021 அன்று நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகுகளில் மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள், 13-10-2021 அன்று, பாரம்பரிய மீன்பிடித்தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, காரைநகர் கடற்படை தளத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்டகால பிரச்சினையில் உடனடியாக இந்திய பிரதமர் தலையிட்டு, இப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்திட, உறுதியான வழிமுறைகளை காண வேண்டுமென்றும், முதல்வர் தனது கடிதத்தின் மூலம் கேட்டு கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு மத்திய மீன்வள துறை இணை மந்திரி எல். முருகன் நேற்று கடிதம் எழுதி உள்ளார்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், இலங்கை கடற்படையின் செயல் கண்டிக்கத்த‌க்கது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்