ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் கொள்ளை

புதுவை அண்ணா சாலையில் ஆடிட்டர் அலுவலகத்தில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-10-16 20:20 GMT
புதுவை அண்ணா சாலையில் ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆடிட்டர் அலுவலகம்
புதுச்சேரி அண்ணா சாலையை சேர்ந்தவர் மிஷ்ரா (வயது 48). ஆடிட்டர். இவரது அலுவலகம் வீட்டின் 2-வது மாடியில் உள்ளது. இவர் புதுவையில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., வருமான வரி கணக்குகளை கவனித்து வருகிறார்.
இந்தநிலையில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில் ஜி.எஸ்.டி., வருமான வரி செலுத்துவதற்காக கொடுக்கப்பட்ட ரூ.13 லட்சத்தை வாங்கி அலுவலகத்தில் உள்ள மேஜையின் லாக்கரில் வைத்து பூட்டினார்.
சம்பவத்தன்று இரவு அவர் தனது அலுவலகத்தை பூட்டி விட்டு தரை தளத்தில் உள்ள வீட்டுக்கு சென்றார். அவரது அலுவலகத்தின் கதவில் உள்ள தாழ்ப்பாள் சரியில்லாமல் இருந்துள்ளது.
ரூ.13 லட்சம் கொள்ளை
மறுநாள் அலுவலகத்திற்கு சென்றபோது கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மிஸ்ரா அலுவலகத்துக்கு சென்று பார்த்தார். அப்போது மேஜையின் லாக்கரில் வைத்திருந்த ரூ.13 லட்சம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  
இதுகுறித்து பெரியகடை போலீசில் மிஷ்ரா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மேரி பிரான்சிஸ்கா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார்   விசாரணை  நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்