அர்ச்சகர் பணிநியமனங்கள் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது -சென்னை ஐகோர்ட்டு

அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்படும் கோவில் அர்ச்சகர் நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2021-10-20 07:20 GMT
சென்னை,

கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும், 3 ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. இந்த விதிகளை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் பரம்பரை பூசாரிகள் 8 பேர் உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், டிஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் பரம்பரை அறங்காவலர்களால்தான் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் 28 மேற்பட்ட ஆகம விதிகள் உள்ளன; அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.

ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், ஆனால் அர்ச்சகர் பணிநியமனங்கள் ஐகோர்ட்டின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றும் ஆகம விதிகளை மீறி நியமனங்கள் மேற்கொள்ளக்கூடாது என  உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்