2 மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைப்பு

புதுச்சேரியில் விபசாரம் நடந்த 2 மசாஜ் சென்டர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2021-10-22 15:54 GMT
புதுச்சேரி
புதுச்சேரியில் விபசாரம் நடந்த 2 மசாஜ் சென்டர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விபசாரம்

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை ‘குறி’ வைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையும், அழகு நிலையம், மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா சென்டர்கள் என்ற பெயரில் விபசார தொழிலும் கொடி கட்டி பறக்கிறது.
இதையடுத்து விபசார தொழிலை தடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன் உத்தரவின் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் நகர் முழுவதும் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். 
கடந்த 16-ந் தேதி நடந்த சோதனையில்     மறைமலை அடிகள் சாலை, அண்ணாநகர், காமராஜர் சாலை ஆகிய 3 இடங்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 பேரை கைது செய்ததுடன், 10 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சீல் வைப்பு

இந்த நிலையில் விபசாரம் நடந்த மசாஜ் சென்டர்களின் உரிமங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காவல்துறை சார்பில் புதுச்சேரி நகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் உத்தரவின் பேரில் வருவாய்துறை அதிகாரி சாம்பசிவம் மற்றும் ஊழியர்கள் நேற்று மறைமலைஅடிகள் சாலை, அண்ணாநகரில் உள்ள 2 மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைத்தனர். மேலும் அவர்களது உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்