அரியர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க கூடாது ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

அரியர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க கூடாது ஐகோர்ட்டு அறிவுறுத்தல்.

Update: 2021-10-22 22:28 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி, அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட பலர் ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அரியர் தேர்வு மாணவர்களுக்கு இரு துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டது. அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை” என்று கூறினார்.

பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் ஆஜரான வக்கீல், “இறுதி பருவத்தேர்வுகளையும், இடைப்பட்ட பருவத் தேர்வுகளையும் நடத்தும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள், “அரியர் தேர்வுகளை எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ்களை வழங்கக்கூடாது” என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். பின்னர், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்