தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30 வரை நீட்டிப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-11-14 04:33 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மேலும் சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது உள்ள கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை, மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்