மேட்டூர் அணையில் நீர் திறப்பு 40,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 40,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-14 09:51 GMT
சேலம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வந்ததால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 41-வது முறையாக அணையின் நீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து உபரியாக 22 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை மேட்டூர் அணையில் நீர்திறப்பு அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 

மேலும் செய்திகள்