விசாரணை கமிஷன் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி

எதிர்க்கட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிரட்டுகிறார் என்றும், விசாரணை கமிஷன் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2021-11-15 20:14 GMT
எடப்பாடி,

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி உள்பட நிவாரண பொருட்களை அவர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போதைய அரசு சரியான முறையில் திட்டமிட்டு செயல்படாத காரணத்தினாலேயே மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஆறுதல்

டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கன மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நானும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் நாளை (இன்று) அங்கு சென்று விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறோம்.

மாநில அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளை கண்டறிந்து நிவாரண நிதி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினால் அ.தி.மு.க. சார்பில் நானும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் மத்திய அரசிடம் வலியுறுத்தி நிவாரண நிதியை விடுவிக்க கேட்டுக்கொள்வோம்.

100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம்

மேட்டூர் அணை உபரி நீரை கடலில் கலக்காமல் நீரேற்று நிலையம் மூலம் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்தோம். இந்த நீர் நிரப்பும் திட்டம் தற்போது முடிந்திருக்க வேண்டும். ஆனால் இத்திட்டம் தாமதமாகி வருகின்றது. இதுகுறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் நான் கூறி இருக்கிறேன்.

எனவே நீர்ப்பாசனத்துறை அமைச்சர் இத்திட்டத்தில் கவனம் செலுத்தி உடனடியாக இந்த பணியை நிறைவேற்றி மேட்டூர் அணையில் இருந்து செல்லும் உபரி நீர் கடலில் கலக்காமல் நீரேற்று நிலையம் மூலம் 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை முடிக்க வேண்டும். பருவமழை காலத்திற்குள் 100 ஏரிகளிலும் உபரிநீரை நிரப்பினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

விசாரணை கமிஷன்

வெள்ளநீர் தேங்குவதை நாங்கள் குற்றச்சாட்டாக கூறினாலும், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு எதிர்க்கட்சியை மிரட்டுகின்ற விதமாக பேசுகிறார். மக்கள் படும் அவதிகள், துன்பங்கள், துயரங்களை நாங்கள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் அவர் விசாரணை கமிஷன் போடுவதாக கூறுகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்