நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி...!!

நாளை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-28 05:32 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது.

கடந்த 2 தினங்களை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழை நீடிக்கும் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தற்போது குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் (வருகிற 1-ந் தேதி) மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.

மேலும் செய்திகள்