மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக உள்ளது அமைச்சர் நமச்சிவாயம்

மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக தான் உள்ளது என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2021-12-01 16:04 GMT
காரைக்கால்
மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக தான் உள்ளது என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட    தலைவர்  துரை சேனாதிபதி தலைமையில்  நடந்தது. 
இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கணபதி, முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம், மாநில ஓ.பி.சி.   அணி     துணைத் தலைவர் செல்வராஜ், முக்கிய நிர்வாகிகள் ராஜசேகரன், நிரவி மனோகரன், வக்கீல் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மழைக்கால நிவாரணம்

கூட்ட முடிவில் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
3 மாதங்களுக்கு ஒரு முறை மாநில, மாவட்ட அளவில் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் செயல்பாடுகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழைக்கால நிவாரணம் விரைந்து வழங்குவது, அனைத்து நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை போடுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முன்னாள் கவர்னர் கிரண்பேடி, மத்திய அரசு தூண்டுதலால் காங்கிரஸ் அரசை செயல்படவிடாமல் தடுத்தது போல் தற்போது மத்திய அரசு தடுப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பா.ஜ.க. மீது பழி சொல்வதை  வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அவரை பொறுத்தவரை எப்போதும் குறைசொல்லியே அரசியல் செய்து பழக்கப்பட்டவர். அவர் சொல்வது போல் ஒன்றும் இல்லை. மத்திய, மாநில அரசு இணக்கமாக தான் உள்ளது. 

விரைவில் நிவாரண தொகை

மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தீபாவளி இலவச அரிசி மக்களுக்கு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மழைக்கால நிவாரணம் ரூ.5  ஆயிரம்    விரைவில் வழங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்