சமூக வலைதளங்களில் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து வெளியிட தடை

சமூக வலைதளங்களில் திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து வெளியிட தடை ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2021-12-02 22:12 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தொல்.திருமாவளவன் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடலூர் மாவட்டத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட கண்ணகி-முருகேசன் ஆகியோரை கடந்த 2003-ம் ஆண்டு கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை சுட்டிகாட்டி திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தடா டி.பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, வக்கீல் ரத்தினம் ஆகியோர் எனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதை சில சமூக வலைதளங்கள் வெளியிட்டுள்ளது. அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக, தடா பெரியசாமி உள்ளிட்டோர் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வீடியோவை வெளியிட சமுக வலைதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், “மனுதாரர் திருமாவளவன் பற்றிய அவதூறு கருத்துக்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள சமூக வலைதளங்கள் வெளியிட தடை விதிக்கிறேன். இந்த வழக்கிற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற ஜனவரி 20-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்