கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை கணவருக்கு வலைவீச்சு

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கொடுவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-12-05 20:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள நவனி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 25). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் அருகே உள்ள முள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த நந்தினி (22) என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் வாலிபர் ஒருவருக்கும், நந்தினிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இது தமிழ்செல்வனுக்கு தெரியவந்தது. எனவே தமிழ்செல்வன் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் கள்ளக்காதலை கைவிட மறுத்த நந்தினி அடிக்கடி வாலிபருடன் செல்போனில் பேசி வந்து உள்ளார்.

இளம்பெண் வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் தமிழ்செல்வன் பால் வாங்குவதற்காக வெளியே சென்றார். அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது நந்தினி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தமிழ்செல்வன், செல்போனை வாங்கி பார்த்தார். அதில் நந்தினி கள்ளக்காதலனுடன் பேசியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு முற்றியதில் தமிழ்செல்வன், நந்தினியை வீட்டில் இருந்த கொடுவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கணவருக்கு வலைவீச்சு

தகவல் அறிந்த போலீசார் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தமிழ்செல்வனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்