மாநகராட்சி, நகராட்சி தேர்தல்: களத்தில் இறங்கி வெற்றி காணவேண்டும் தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு

மாநகராட்சி, நகராட்சி தேர்தல்: களத்தில் இறங்கி வெற்றி காணவேண்டும் தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு.

Update: 2021-12-06 22:02 GMT
சென்னை,

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சியில் சுயாட்சிக்காக குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் நம் மய்யம், கிராம சபையை பெரிதாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு சக்தி. நடக்கவிருக்கும் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் நாம் எதற்காக குரல் கொடுத்தோமோ, அதே களத்தில் இறங்கி வெற்றியும் காண வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

உங்கள் நடுவிலிருக்கும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, பணியை பாருங்கள். உங்கள் நலன் எனக்கு மட்டுமல்ல, நம் நாட்டிற்கும் மிக முக்கியம். நீங்கள் இந்தத் தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது கொரோனா தொற்றுக்கு எதிரான தற்காப்புகளை மேற்கொள்ள வேண்டும். இந்த தொற்று நீங்கி விட்டது என்ற நம்பிக்கையில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது, இதற்கு முன்னுதாரணமாக நானே இங்கு நின்றுகொண்டிருக்கிறேன்.

இந்தத் தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, முன்ஜாக்கிரதையும், தற்காப்பும் மிகவும் அவசியம். அதை செய்துகாட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்