சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையானவர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டால் விடுதலை உத்தரவு ரத்து

சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையானவர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டால் விடுதலை உத்தரவு ரத்து செய்யப்படும் என மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது.

Update: 2021-12-08 19:57 GMT
மதுரை,

மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்த இளவரசி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த ஆண்டு அவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உமாசங்கர், சாய்பிரசாத் ஆகியோர் ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்தனர். அவர்கள் முன்கூட்டியே விடுதலையாகி, எனது கணவரை கொலை செய்துள்ளனர்.

எனவே அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

விடுதலை உத்தரவு ரத்து

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, உமாசங்கர், சாய்பிரசாத் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து, அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தது.

இதையடுத்து அதிகாரிகள் ஆஜராகி, “உமாசங்கர் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சாய் பிரசாத்தை விரைவில் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறார்” என தெரிவித்தனர்.

மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டால்...

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “உமாசங்கர், சாய்பிரசாத் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இவர்களைப்போல முன்கூட்டியே விடுதலையானவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக அந்த விடுதலை உத்தரவு ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார். இதுசம்பந்தமாக அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சாய்பிரசாத்தை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்