மதுரை அருகே நான்கு வழிச்சாலையில்: காருடன் 166 பவுன் நகை-பணம் கொள்ளை

மதுரை அருகே நான்கு வழிச்சாலையில் காருடன், 166 பவுன் தங்கநகை, பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2021-12-09 20:55 GMT
மதுரை,

மதுரை தத்தனேரி பகுதியில் தனியார் நகை அடகு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு மைக்கேல்ராஜ் (வயது 30) என்பவர் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 7-ந் தேதி மாலையில் அந்த அடகு நிறுவனத்தில் இருந்து 50 லட்ச ரூபாய் எடுத்துக்கொண்டு மைக்கேல்ராஜ், அந்த நிறுவன பணியாளர் செந்தில்குமார், டிரைவர் சரவணன் என 3 பேர் விழுப்புரத்தில் உள்ள கிளை நிறுவனத்துக்கு ஒரு காரில் சென்றுள்ளனர்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் கிளை நிறுவனத்தில் இருந்து 166 பவுன் தங்கநகைகள், ரூ.1 லட்சம் எடுத்துக்கொண்டு மதுரையை நோக்கி காரில் புறப்பட்டு வந்தனர்.

துணிகர கொள்ளை

நள்ளிரவில் மதுரை மாவட்டம் மலம்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் அவர்களது கார் வந்தது. அப்போது, பின்னால் மற்றொரு கார் வந்தது. அந்த கார் திடீரென முந்திச்சென்று சாலையை வழிமறித்து நின்றது. இதனால் நகை, பணத்துடன் வந்த காரும் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது.

சாலையின் குறுக்காக நிறுத்திய காரில் இருந்து இறங்கிய 5 பேர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஓடி வந்து, அடகுநிறுவன ஊழியர்களை மிரட்டினர். மேலும் மைக்கேல்ராஜை அரிவாளின் கைப்பிடியால் தலையில் தாக்கினர். பின்னர் காரில் இருந்த 3 பேரையும் கீழே இறக்கிவிட்டு, அதில் இருந்த 166 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் மற்றும் காரையும் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். ஒரு சில நிமிடங்களில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

கார் மீட்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த அடகு நிறுவன ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில், கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் கொட்டாம்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியில் கண்மாய் கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கார் ஒன்று நிற்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு நின்றிருந்த கார் அடகு நிறுவன ஊழியர்களிடம் இருந்து கொள்ளையர்கள் பறித்து வந்த கார் என தெரியவந்ததால், காரை மீட்டனர்.

போலீஸ் வலைவீச்சு

பரபரப்பாக காணப்படும் மதுரை-சென்னை நான்கு வழிச்சாலையில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்துடன் தப்பிய கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்