தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

Update: 2021-12-15 21:13 GMT
சென்னை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா கொசபாளையம் சூரியகுளம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 55). சமையல் தொழிலாளி. இவர், தனது மனைவி ஆரவள்ளி என்பவருடன் சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைபள்ளம் அண்ணா தெருவில் வசித்து வந்தார்.

கடந்த 12.6.2014 அன்று சேகர், தனது மனைவியை தாம்பத்திய உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு ஆரவள்ளி மறுத்துள்ளார். அப்போது சேகர், வேறு யாருடனாவது தொடர்பு வைத்துள்ளாயா? என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

ஆயுள்தண்டனை

இதில் ஆத்திரம் அடைந்த சேகர், ஆரவள்ளியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பி.ஆரத்தி ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி சேகருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்