மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் போராட்டம்

மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 1½ லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

Update: 2021-12-20 19:02 GMT
சென்னை,

இரும்பு, அலுமினியம், காப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து சிறு மற்றும் குறுந்தொழில் நிறுனங்கள் நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் அந்தந்த பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவர் கே.மாரியப்பன், முன்னாள் தலைவர் பாபு, பொதுச்செயலாளர் வி.நித்தியானந்தம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

நலிவடைந்து வருகிறது

அப்போது, முன்னாள் தலைவர் பாபு, பொதுச்செயலாளர் வி.நித்தியானந்தம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக சிறு மற்றும் குறுந்தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு அடுத்தப்படியாக நாட்டின் முதுகெலும்பாக விளங்குவதும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் தான். ஆனால் இன்று மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து வருகின்றன. பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

முன்பு இரும்பு உள்ளிட்ட தாது பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் தற்போது இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டு, ஏற்றுமதி செய்கின்றனர். இந்தியாவிலே மூலப்பொருட்களின் பற்றாக்குறை இருக்கும் போது, ஏற்றுமதி செய்யப்பட்டால், இங்கிருக்கும் சிறு நிறுவனங்களில் நிலை என்னவாகும்?. இதனால் ஏற்படும் மூலப்பொருட்களின் விலையேற்றம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்டவை சிறு குறுந்தொழில்களை அழித்து கொண்டிருக்கிறது.

நிறுனங்கள்மூடப்பட்டு விட்டன

சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் 75 சதவீதம் இரும்பு சார்ந்த பொருட்களையே உற்பத்தி செய்கிறார்கள். பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விலை 76 சதவீதம் கூடியுள்ளது. தமிழகத்தில் மட்டும் வாகன உதிரிபாகங்கள், பி.வி.சி, பால்கவர், மற்றும் பேக்கிங் மெட்டிரியல் உற்பத்தி செய்யும் நிறுனங்கள் சுமார் 15 ஆயிரத்துக்கு மேல் உள்ளன.

இந்த நிறுவனங்கள் விற்கும் செலவை விட மூலப்பொருட்கள் கொள்முதல் விலையே அதிகமாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மூலப்பொருட்களின் விலை 60 முதல் 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இந்த விலையேற்றத்தை கண்டித்து இன்று(நேற்று) இந்தியா முழுவதும் இருக்கும் தொழிற்சாலைகளை மூடி தங்களது கருத்துகளை தெரியப்படுத்துவதற்காக அந்தந்த மாநிலங்களில் போராட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்

அதன் ஒரு பகுதியாக தான் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் 1½ லட்சம் பேர் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். தமிழக அரசு நூல் விலையை மத்திய அரசிடம் பேசி குறைத்துள்ளது. அதேபோல், எங்களது கோரிக்கையும் மத்திய அரசிடம் கொண்டு சேர்த்து மூலப்பொருட்களின் விலையை குறைத்து, எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்