அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை

அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-24 18:55 GMT
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகிய பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் திட்டத்தை, 18 மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

அதன்படி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வேதபாராயணர் பள்ளிகளில் பயின்று வரும் 18 மாணவர்கள், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்றுவரும் 24 மாணவர்கள் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் 25 மாணவர்கள் என மொத்தம் 67 மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர்த்தப்பட்ட உதவித்தொகையான ரூ.3 ஆயிரத்தை 18 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அரசு உயர்அதிகாரிகள் டாக்டர் பி.சந்தரமோகன், ஜெ.குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்