பொங்கல் பண்டிகை: தமிழகம் முழுவதும் 5¾ லட்சம் பேர் பஸ்களில் பயணம்

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 5¾ லட்சம் பேர் பஸ்களில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

Update: 2022-01-13 23:04 GMT
சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 11-ந்தேதி முதல் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் மிகுதியாக இருந்தது.

குறிப்பாக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்திருந்தது. பயணிகள் தேவைக்கேற்ப பஸ்களும் இயக்கப்பட்டன. அதேவேளை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்து வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால், கமிஷனர் எஸ்.நடராஜன், மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கு.இளங்கோவன், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஜோசப் டையாஸ் உள்பட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

முக கவசம் அணிய அறிவுரை

இந்த ஆய்வின்போது, கோயம்பேடு பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பயணிகளிடம் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, முன்பதிவு செய்துள்ள பஸ்களில் அமர்ந்திருந்த பயணிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

5¾ லட்சம் பேர் பயணம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சென்னையில் 6 இடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அந்தவகையில் கடந்த 11, 12, 13-ந்தேதிகளில் சென்னையிலிருந்து 10,300 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து 6,468 பஸ்கள் என ஆக மொத்தம் 16,768 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து கடந்த 11-ந்தேதி 2,763 பஸ்களில் 1,14,665 பேரும், 12-ந்தேதி 3,352 பஸ்களில் 1,36,730 பேரும் பயணம் செய்துள்ளனர். 13-ந்தேதி (இன்று) சென்னையில் இருந்து 2,011 பஸ்களில் 85,971 பயணிகள் என மொத்தம் 8,126 பேருந்துகளில் 3,37,366 பேர் பயணம் செய்துள்ளனர். பிற பகுதிகளில் இருந்து பல்வேறு முக்கிய ஊர்களுக்கு கடந்த 3 நாட்களில் ஓட்டுமொத்தமாக 12,865 பஸ்களில் 5,74,316 பேர் பயணம் செய்துள்ளனர்.

வருகிற 16-ந்தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அதன்படி சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் 3,797 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,097 பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 6,612 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16,709 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல ஆம்னி பஸ்களை பொறுத்தவரை இன்று (நேற்று) மாலை 6 மணி வரை சென்னையில் இருந்து 62 ஆயிரம் பேர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அபராதம்

அதேபோல தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் குழுக்கள் மூலம் 1,364 பஸ்கள் தணிக்கை செய்யப்பட்டு ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து தாம்பரம் பஸ் நிலையத்துக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்றார். அங்கு பஸ்கள் சேவை குறித்து ஆய்வு செய்த அவர், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்