கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம்-குடியிருப்பு கட்டிடங்கள் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.26.66 கோடியில் கட்டப்பட்ட கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-01-19 23:14 GMT
சென்னை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய இடங்களில் ரூ.9 கோடியே 85 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள், ஆரணி, குடியாத்தம், அரக்கோணம் மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 48 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் குடியிருப்புக் கட்டிடங்கள்,

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தம், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் ஆவுடையார்கோவில் ஆகிய இடங்களில் ரூ.14 கோடியே 76 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள், ஆர்.கே.பேட்டை மற்றும் மன்னார்குடி ஆகிய இடங்களில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடங்கள் என மொத்தம் ரூ.26 கோடியே 66 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை 16 கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக்காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

அடிக்கல்

மேலும், மயிலாடுதுறையில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாக கட்டிடத்துக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்த வளாகம் 6.54 ஏக்கர் நிலப்பரப்பில், 2 லட்சத்து 84 ஆயிரத்து 946 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்களுடன் 63 பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்களை உள்ளடக்கி கட்டப்படவுள்ளது.

ஆவினில் 5 புதியபொருட்கள்

இதேபோல, ஆவின் நிறுவனத்தால் புதிதாக தயாரிக்கப்பட்ட ‘பிரீமியம் மில்க் கேக்', ‘யோகர்ட் பானம்' (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), ‘பாயாசம் மிக்ஸ்', ‘பால் புரத நூடுல்ஸ்' மற்றும் ‘டெய்ரி ஒய்ட்னர்' ஆகிய 5 புதிய பொருட்களை முதல்-அமைச்சர் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கலந்துகொண்டோர்

இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், சா.மு.நாசர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்