தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மர்மச்சாவு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-01-23 21:17 GMT
தஞ்சாவூர்,

புதுச்சேரி மாநிலம் கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கோட்டுச்சேரி தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவருடைய மகன் வெற்றிசெல்வன் (வயது42). கடந்த மாதம் 21-ந் தேதி கோட்டுச்சேரியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெற்றிசெல்வன் காரில் புறப்பட்டு வெளியே சென்றார். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ரெயில் நிலையத்தில் நின்ற கார்

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றது. அதன் அருகிலேயே ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அருகிலிருந்த ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மயங்கிய நிலையில் இருந்தவரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை

இதைத்தொடர்ந்து காரை ஆய்வு செய்த போலீசார் காரில் இருந்த செல்போனை எடுத்து அதில் இருந்த எண்கள் மூலம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரின் அருகே இறந்து கிடந்தவர் புதுச்சேரி மாநிலம் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பஞ்சவர்ணத்தின் மகன் வெற்றிசெல்வன் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கும்பகோணம் மேற்கு போலீசார் வெற்றிசெல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோட்டுச்சேரியை சேர்ந்த வெற்றிசெல்வன் ஏன் கும்பகோணத்துக்கு வந்தார்? அவர் எப்படி இறந்தார்? அவர் மரணத்தில் மர்மம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்