"பீஸ்ட் " படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர் கார் விபத்தில் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்...!

கோவை அருகே பீஸ்ட் படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர் கார் விபத்தில் உயிரிழந்து உள்ளார்.

Update: 2022-04-13 10:30 GMT
கோவை,

கோவை நஞ்சுண்டாபுரம் சந்தோஷ் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மகன் கவுசிக்(வயது21). இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சொந்தமாக தொழில் செய்து வந்தார்.

இவருடை நண்பர் பிரீத்வி(20), உறவினர் கனிஷ்கா, அவரது தோழி நிவேதா. நடிகர் விஜய்யின் ரசிகர்களான இவர்கள் 4 பேரும் இன்று அதிகாலை முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். 

4 பேரும் இரவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பீஸ்ட் படம் பார்ப்பதற்காக ஒரு காரில் அதிகாலை 2.45 மணியளவில் வாலாங்குளம் உக்கடம் பைபாஸ் சாலையில் சென்றனர்.

அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிச்சென்ற கவுசிக் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பிரீத்வி, கனிஷ்கா, நிவேதா ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். 

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கோவை கிழக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். 

பின்னர் விபத்தில் பலியான கவுசிக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்