குன்னூரில் பரபரப்பு : சுற்றுலா பயணிகளை விரட்டிய யானைகள்...!

குன்னூரில் சுற்றுலா பயணிகளை யானைகள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-15 10:45 GMT
குன்னூர், 

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலையடிவாரத்தில் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் காட்டு விலங்கு கள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

வனப்பகுதியில் ஏற்ப்பட்டுள்ள வறட்சியின் காரணமாக 2 குட்டிகளுடன் கூடிய 9 யானைகள் குன்னூர் வனச்சரக பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இந்த யானை கூட்டம் தண்ணீர் மற்றும் உணவுக்காக பர்லியார், மரப்பாலம், காட்டேரி, கிளண்டேல், பில்லிமலை, உலிக்கல் ஆகிய பகுதிகளில் கடந்த 23 நாட்களாக சுற்றித் திரிந்து வருகின்றன.

நேற்று காட்டேரி பகுதிக்கு மீண்டும் வந்த யானைகள் மயான பகுதிக்குள் முகாமிட்டு இருந்தன. இந்த யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயம் இருந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினர். 

யானைகள் ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே வனப் பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். அப்போது காட்டேரி பூங்காவில் இருந்த சுற்றுலா பயணிகள் யானைகள் வருவதை கண்டு ரன்னி மேடு ரெயில் நிலையத்திற்கு வந்து யானைகளை புகைப்படம் எடுக்க வந்தனர்.

அப்போது ஆக்ரோசம் அடைந்த யானைகள் சுற்றுலா பயணிகளை விரட்டியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. பின்னர் வனத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பின்னர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். 

இருப்பினும் வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்