தஞ்சாவூர்: பிளஸ் 2 மாணவியை காதலித்த வாலிபர் வெட்டி கொலை....!

தஞ்சாவூர் அருகே பிளஸ் 2 மாணவியை காதலித்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-04-22 09:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த வாளமர்கோட்டை வாண்டையார் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் ஆனந்த் (வயது 21). இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். இந்த நிலையில் ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

இதனை கேள்விப்பட்டு சூரக்கோட்டையை சேர்ந்த அந்த மாணவியின் அத்தை மகனான உதயகுமார் (25) ஆத்திரம் அடைந்தார். இன்று அதிகாலை வாளமர்கோட்டை குளக்கரையில் ஆனந்த் நின்று கொண்டிருந்தார். இதனை அறிந்து உதயகுமார் அந்த இடத்திற்கு சென்றார். 

அப்போது என் அத்தை மகளை நீ காதலிக்க கூடாது. அவளை விட்டு விலகி விடு என ஆனந்திடம் கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி உதயகுமார் ஆத்திரமடைந்து கட்டையால் ஆனந்தை தாக்கியும், அரிவாளால் வெட்டி விட்டும் தப்பி ஓடினார். 

இந்த தாக்குதலில் ஆனந்த் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்