வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - 496 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை தாக்கல்

வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 496 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-24 11:00 GMT
வேலூர்,

வேலூரில் கடந்த மார்ச் 17 ஆம் தேதி பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் காட்பாடியில் உள்ள சினிமா தியேட்டரில் இரவு காட்சி பார்க்க சென்றுள்ளார். படம் முடிந்து நள்ளிரவு 12.30 மணியளவில் 2 பேரும் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளனர். 

சிறிது தூரம் சென்ற பிறகு, ஆட்டோவில் பயணித்த ஆண் நண்பரை அடித்து துரத்திவிட்டு, அந்த பெண் மருத்துவரை ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, மறைவான இடத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிறார் குற்றவாளி உள்பட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்திருந்தனர். அவர்கள் 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கடந்த 15 ஆம் தேதி உத்தரவிட்டார். 

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தொடர்புடைய அறிவியல் தடயங்கள், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த 496 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை வேலூர் மாவட்ட காவல்துறையினர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்