தூத்துக்குடி கடற்கரை பகுதியில் திடீரென கடல் சீற்றம்..! பொதுமக்கள் அச்சம்..!

தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் இன்று திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதால் கடற்கரையிலிருந்து 100 அடி தொலைவுக்கு கடல் நீர் வெளியேறியது.

Update: 2022-04-30 14:04 GMT
தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த பகுதியில் இன்று திடீரென காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக கடல் அலைகளின் வேகம் அதிகரித்து கடற்கரையில் இருந்து ஏறத்தாழ 100 அடி தொலைவுக்கு கடல் நீர் வெளியே வந்தது.

இதனால் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தோமையார் கோயில், மீனவர்கள் மீன்பிடி படகுகளை பழுது பார்க்கக்கூடிய இடங்கள் மற்றும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் இருசக்கர வாகனங்கள் கடல் நீரால் சூழ்ந்தது. மேலும் நாட்டு படகுகள் பலத்த காற்று காரணமாக ஒன்றோடொன்று மோதி சேதமடையும் சூழலும் ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து கடலில் நிறுத்தியிருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு இழுத்து வந்து கயிறு மூலம் கட்டி பாதுகாத்தனர். இந்தப் பகுதியில் தொடர்ந்து இதே போன்று அடிக்கடி கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்