நாய்களை கொண்டு உடும்பு வேட்டையாடிய 4 பேர் கைது...!

குமரி அருகே வேட்டை நாய்களை கொண்டு உடும்புகளை வேட்டையாடிய 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2022-05-01 08:24 GMT
ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்ட வன உயிரின சரணாலயம் பூதப்பாண்டிவன சரகம் தெற்குமலை காப்பு காட்டின் கிழக்கு பகுதியில் சிலர் உடும்பு வேட்டையாடுவதாக மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் இளையராஜாவுக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து பூதப்பாண்டி வனசரகர் திலிபன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வேட்டை தடுப்பு காவலர் ஜெகன், ஆகியோர் பழவூர் பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது அவ்வழியே நாய்களுடன், வேட்டையாடிய உடும்புகளோடு 4 பேர் வந்தனர். 

விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தை சேர்ந்த சாத்யகி மிராஸ் (வயது 22), நவின்ராஜ் ( 25) அபிமன்யூ ( 24), பாக்கிய ஜெகேஸ் ( 29) என்பது தெரியவந்தது.

மேலும் வேட்டைநாய்களை வைத்து உடும்புகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் 2 வேட்டைநாய்களையும், 4 உடும்புகளையும் பறிமுதல் செய்தனர். இதில் 1 உடும்பு உயிருடன் இருந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்