திருப்பத்தூர்: ஓலை வீட்டின் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி பலி

நாட்டறம்பள்ளி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் மரம் முறிந்து கூறை வீட்டின் மீது விழுந்ததில் உறங்கிக் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2022-05-10 04:20 GMT
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமம் செத்தமலை பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணாபாலு (வயது 35). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (27). இவர்களுக்கு தேவிகா என்கின்ற தீப ஜோதி (6) மற்றும் கவின் (2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இதில் தேவிகா பழைய பேட்டை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 1 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு அனைவரும் தங்களது ஓலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 11 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக அவரது வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரம் முறிந்து கூரை வீட்டின் மீது விழுந்தது. 

பின்னர் சுதாரித்துக் கொண்ட சத்யா தனது 2-வது குழந்தை கவினை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மரக்கிளையின் இடுக்கில் மாட்டி கொண்ட கிருஷ்ணாபாலுக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.  மேலும் தூங்கி கொண்டிருந்த குழந்தை தேவிகா என்கின்ற தீப ஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து தகவலறிந்தது வந்த நாட்டறம்பள்ளி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மீது மரம் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்