கோவை: கஞ்சா விற்ற வடமாநில இளைஞர்கள் கைது!

கோவை அருகே கஞ்சா விற்ற வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-11 04:12 GMT
கோவை:

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் வடமாநில இளைஞர்கள் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் நால் ரோடு பகுதிக்கு சென்ற போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்த வடமாநில இளைஞர்கள் இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். போலீசார் அவர்கள் இருவரையும் சோதனை செய்த போது விற்பனைக்காக கஞ்சா பெட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து  காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவ நாராயணன் மகன்கள் நிதிஷ் குமார் (வயது 26) மற்றும் சதிஷ் பிரசாத் (19) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்கள் கஞ்சா பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். வடமாநிலத்தவர்கள் அதிகப்படியாக வசிக்கும் இப்பகுதியில் வடமாநில இளைஞர்கள் தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்து  விற்பனை செய்வது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்