மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - வாலிபர் உயிரிழப்பு
தரங்கம்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தரங்கம்பாடி,
மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி கிராமத்தை சேர்ந்தவர் இந்திரன் (வயது 20) மற்றும் கபிலன் ( 25) ஒரே மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் காளகஸ்தினாபுரத்தை சேர்ந்த மணியரசன்குமார் (20) மற்றும் ஆறுபாதியை சேர்ந்த முருகேசன் (20) வந்து கொண்டிருந்தனர்.
அதில், எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேரும் படு காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.