ராமநத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது

ராமநத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-08-30 18:45 GMT

ராமநத்தம்

ராமநத்தம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் அருகே நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவலை அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராமநத்தம் அடுத்த ம.புடையூரை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜகோபால்(வயது 24), திட்டக்குடி அருகே உள்ள போத்திரமங்களம் கிராமத்தை சேர்ந்த முத்தழகன் மகன் ராஜா(20), பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அகரம்சீகூரை சேர்ந்த அசோக்குமார் மகன் வசந்தகுமார்(20), திருமாந்துரையை சேர்ந்த வீரமுத்து மகன் அன்பரசன்(20) என்பதும், இவர்கள் 4 பேரும் சேர்ந்து ராமநத்தம், திட்டக்குடி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜகோபால் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், 1 சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்