மெக்கானிக்குக்கு சரமாரி அரிவாள் வெட்டு

போடியில் பர்னிச்சர் கடைக்குள் புகுந்து மெக்கானிக்கை அரிவாளால் வெட்டினர்.

Update: 2023-10-17 00:00 GMT

போடி சுப்புராஜ்நகர், ஜெயம்நகரை சேர்ந்தவர் முருகேசன் (39). இருசக்கர வாகன மெக்கானிக். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனை அதே பகுதியை சேர்ந்த இளந்தமிழன் என்பவர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகேசனுக்கும், இளந்தமிழனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் முருகேசன் நேற்று போடியில், தேனி சாலையில் உள்ள ஒரு பர்னிச்சர் கடைக்கு சென்றார். அப்போது அங்கு இளந்தமிழன் உள்பட 3 பேர் வந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் அரிவாளால் முருகேசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், படுகாயமடைந்த முருகேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புகாரின்பேரில் போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போடியில் பர்னிச்சர் கடைக்குள் புகுந்து முருகேசனை அரிவாளால் வெட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்