அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுா்ணமியை யொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-08-31 15:05 GMT


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுா்ணமியை யொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.58 மணியளவில் தொடங்கி இன்று காலை 8.17 மணியளவில் நிறைவடைந்தது.

பவுர்ணமியை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

நேற்று இரவு 11 மணியளவில் இருந்து 2 மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது.

மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பின்னர் லேசான சாரல் மழை பெய்தது. இன்று காலை வரை பவுர்ணமி நீடித்தது. விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

அதனைத்தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. பவுர்ணமியையொட்டி கிரிவலப்பாதை மற்றும் கோவிலில் போலீசார் தொடர்ந்து ரோந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்