கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி விவசாயி தர்ணா

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டி விவசாயி தர்ணாவில் ஈடுபட்டாா்.

Update: 2023-10-02 18:45 GMT

திருக்கோவிலூர் அருகே உள்ள பூமாரி கிராமத்தை சேர்ந்தவர் குமாரவேல் (வயது 56). விவசாயி. இவர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் கதவின் முன்பு கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட குமாரவேலிடம் விசாரணை நடத்தினர்.

அதில் குமாரவேல் கடந்த 2015-ம் ஆண்டு தனது சொத்துகளை மகன்களுக்கு தானசெட்டில்மெண்ட் எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் அவரை மகன்கள் முறையாக கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவருடைய மகன்களுக்கு எழுதி கொடுத்த தான செட்டில்மெண்டை ரத்து செய்யக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அதன்பிறகு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து மனு கொடுத்து வந்துள்ளார். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர், கலெக்டா் அலுவலகம் முன்பு தா்ணாவில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்