மகளை மிரட்டுவதற்காக தீக்குளிப்பது போன்று மிரட்டிய தாய் மீது தீப்பிடித்தது

மகளை மிரட்டுவதற்காக தீக்குளிப்பது போன்று மிரட்டிய தாய் மீது தீப்பிடித்து தீக்காயம் ஏற்பட்டது.

Update: 2023-06-22 18:31 GMT


திருவண்ணாமலையில் வீட்டு வேலை செய்யாத மகளை மிரட்டுவதற்காக தீக்குளிப்பது போன்று மிரட்டிய தாய் மீது தீப்பிடித்து படுகாயம் அடைந்தார். தடுக்க சென்ற மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது.

கூலி தொழிலாளி

திருவண்ணாமலை வ.உ.சி. நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மோகன், கூலி தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா (வயது 40). இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர்கள் பட்டப்படிப்பு படித்து உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை புஷ்பாவும், அவரது மகள் லட்சுமியும் (25) வீட்டில் இருந்தனர். அப்போது லட்சுமியை வீட்டு வேலை செய்யும்படி அவரது தாய் கூறியதாக தெரிகிறது. இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மகளை மிரட்டுவதற்காக புஷ்பா வீட்டில் சிறிய கேனில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிப்பது போல மிரட்டி உள்ளார்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றி உடலில் தீப்பிடித்து உள்ளது. இதனால் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி தாயின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றார். இதனால் அவரது கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

தாய், மகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்