வாகனம் நிறுத்திய இடத்தை விட்டு வளைவு, நெளிவாக போடப்பட்ட ரோடு

கவுண்டம்பாளையம் அருகே வாகனம் நிறுத்திய இடத்தை விட்டு வளைவு, நெளிவாக போடப்பட்ட ரோடு சமூக வலைத்தளத்தில் வைரலானதால் சரிசெய்யப்பட்டது.

Update: 2022-09-22 18:45 GMT

கோவை

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவை- மேட்டுப்பாளையம் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி மின் மயானம் அருகே இரவு நேரத்தில் தார்ச்சாலை போடப்பட்டது. அப்போது அங்கு இறந்தவர்களின் உடல்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு முழுமையாக சாலை போடாமல் வாகனங்கள் நிற்கும் இடத்தை விட்டு வளைவு, நெளிவாக சாலை போடப்பட்டது.

அலங்கோலமாக சாலை அமைக்கப்பட்ட சாலையை புகைப்படம் எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி விட்டு முழுவதுமாக சாலை அமைத்தனர். இது போல், தமிழகத்தில் சென்னை சைதாப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோட்டில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை அகற்றாமல் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.

சாய்நாதபுரத்திலும் ஜீப்பை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. வேலூர் சத்துவாச்சாரி விஜயராகபுரம் 2-வது தெருவில் அடிபம்பை மறைத்து காங்கிரீட் கலவை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்