சிறுத்தை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2024-04-08 15:47 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டன.

தற்போது மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கால் தடத்தை ஆய்வு செய்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கூண்டில் சிக்காமல் தொடர்ந்து 6-வது நாளாக சிறுத்தை போக்கு காட்டி வருகிறது.

இதற்கிடையே, சிறுத்தையை பற்றி பொய்யான தகவல்களை சிலர் சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில், சிறுத்தை பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொய் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்